சி. பா. ஆதித்தனார் (27 செப்டம்பர் 1905 – 24 மே 1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார்.[1]எனினும், காந்தியின்தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடைநிறுத்தினார்.